புனித அகிலத்திரட்டு அம்மானை

அத்தியாயம் – 4

திருஏடு வாசிப்பும், பாராயண உரையும்

அய்யா துணை

தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக்
கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும்
தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமே மாளிகையும்
வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள்
மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு
வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றா ரம்மானை
நெய்த்தெளிய கன்னி நேரிழைமா ரெல்லோரும்
இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக
அப்படியே மதலைபெற்று அகமகிழ்ந்தா ரம்மானை
பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர
சீலமுள்ள வித்தை சிறக்க அவர்வருத்தி
எமத்திறைவ ராக எங்கும் புகழ்ந்திடவே
சமர்த்த ரெனஅவர்கள் தலையெடுத்தா ரம்மானை
முத்து வியாபாரம் முதல்வியா பாரமுதல்
பத்தரை மாற்றுப் பசும்பொன்வியா பாரமுடன்
மாணிக்க வியாபாரம் வியிரப்பொன் வியாபாரம்
ஆணிப்பொன் வியாபாரம் அழகுகச்சை வியாபாரம்
கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம்
ஒப்பமுள்ள வியாபாரம் ஒக்கமிகச் செய்தனராம்
தாலம தேறித் தைரியப் பால்வாங்கி  20

மேலுள்ள சான்றோர் மிகுதியா யாண்டிருந்தார்
நெய்த்தொழிலும் வில்தொழிலும் நெறடுவிதத் தொழிலும்
மெய்த்தொழில்கள் கற்று மேலோ ரெனவளர்ந்தார்
சோழ னதையறிந்து தெய்வச்சான் றோர்களுக்கு
வேழம்பல கொடுத்து மிகுகற்பமுங் கொடுத்து
நல்லமன்ன ரென்று நாடி மகிழ்ந்திருந்தார்
செல்லமன்ன ரான தெய்வச்சான் றோர்களுக்கு
அடிக்கல் லெழுதி ஆயிரம் பொன்கொடுத்து
முடிக்கு முடிச்சோழன் முத்துமுடியுங் கொடுத்து
வீர விருதுகளும் வேழம் பரிகொடுத்து
பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து
சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து
ஆழமுள்ள சான்றோர் அரசாண்டா ரம்மானை
சோழனுட னெதிர்த்துச் சோரவந்த மாற்றானை
வேழமுடி மன்னர் வெற்றிகொண் டாண்டிருந்தார்
வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று
அட்டாளத் தேசம் அடக்கியர சாண்டிருந்தார்
இப்படியே சான்றோர் இராச்சியத்தை யாண்டிருக்க
அப்படியே சீமை அவர்க்குள்ளே யாக்கிவைத்துத்
தர்மமுடன் பூமி தானாண் டிருக்கையிலே 40
வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கே ளொண்ணுதலே

கலியன் பிறப்பு

சீரங்க மானதிலே சீரங்க நாதருந்தான்
பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே
நாட்டுக்குக் கேடு நாட்பிடித்த செய்திதன்னை
கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு
முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே
அன்னேகே ளஞ்சுதுண்டம் அவனி தனிலேபிறந்து
ஆதி தனைநினைத்து ஆளாம லவ்வுயிர்கள்
நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி
முப்பிறவி யோடாறும் முதலோனைப் போற்றாமல்
அப்பிறவி யாறும் அழித்ததின்மே லாயிழையே
குருமுனிவ னான கூர்மையுள்ள மாமுனிவன்
அருமுனிவ னான ஆதிமுனி யைநோக்கி
சிவனெனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன்
தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே

முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண் டாக வுடல்பிளந்து
தன்னே வுயிரோ டஞ்சுசெய்து சுவாமி யுனைநினை யாத்ததினால்
வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடல மிழந்துகுண்டம்
இன்னம் பிறப்பொன் றுண்டல்லவோ இறந்த குறோணி யவன்தனக்கே
வாசமுள்ள நேசா மற்றொப்பில் லாதவனே 60

ஈசனே நானுமொன்று இயம்புகிறேன் கேளுமையா
குறோணி யவனுடலைக் கூர்மையுட னேபிளந்து
சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய
அஞ்சுதர முயிரு அவனிதனி லேபிறந்து
பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல்
மாயனையு மெண்ணாமல் மதமா யிருந்ததினால்
ஆயனந்தச் சூரரையும் அழித்தார்கா ணீசுரரே
முச்சூர னோடாறு யுகமு முயிரழித்து
அச்சூரக் குடும்பம் அறுத்தந்த மாயவரும்
கொண்டிருந்த பொய்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து
ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தா ரம்மானை
முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே
அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய்
ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும்
வீறாக ஈசுரரை விண்ணப்பஞ் செய்துநின்றான்
நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும்
வல்லவனே மாமுனியே மாயன்வர வேண்டாமோ
என்றுநல்ல ஈசர் இயம்பமுனி யேதுசொல்வான்
நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோ ராம்பிறவி
பிறக்கத் தவசு புரியப்போய்க் கீழுலகில் 80

உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கி றாரெனவே
தேவமுனி சொல்ல சிவனா ரகமகிழ்ந்து
கோவுகத்தி லுள்ள குருவசிஷ்டர் தங்களையும்
தெய்வலோ கத்திலுள்ள தேவரை யும்வருத்தி
வைந்தலோ கத்திலுள்ள வாய்த்ததர்மி தங்களையும்
கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரை யும்வருத்தி
இணையாக மேலோகத்(து) எல்லோரை யும்வருத்தி
சத்தி மறையும் சாஸ்திரத்தை யும்வருத்தி
அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும்
சங்கமறையை வருத்தித் தான்கேட்பா ரீசுரரும்
இங்குண்டோ மாலும் எங்கிருப்ப துண்டனவே
எல்லோ ருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார்
அல்லோ ருங்கேட்க அரன்சொன்னா ரம்மானை
வேழமொத்த தேவரெல்லாம் மேகவண்ண ரிங்கேயில்லை
கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி
ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க
இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே
எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று
அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார்
முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத் 100

தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென
ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து
வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே
இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது
அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால்
இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ
நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும்
அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும்
குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன்
மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு
நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை
கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே
இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே
படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே
நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை
அப்போது தேவர்களும் ஆனமறை வேதியரும்
எப்போது மிறவா(து) இருக்கும் முனிவர்களும்
நல்லதுதா னென்று நாடி யகமகிழ்ந்து
வல்லப் பிறவி வகுக்கத் துணிந்தனராம்
பிறவி வகுக்கவென்று பெரியோ னகமகிழ்ந்து 120

திறவி முதலோன் தெளிந்துநிற்கும் வேளையிலே
துண்டமது பிண்டமதைத் துளைத்துக்கால் மேல்நீட்டி
மண்டைகீழ் கால்மேலாய் வந்துதித்தா னம்மானை
எல்லோருங் கண்டு இதுகண் மாயமெனவே
அல்லோரும் வந்து ஆதியோ டேவுரைத்தார்
உடனே சிவமும் உள்ள மிகக்களித்து
இடமே தான்பேர்ந்து எழுந்தருளி ஈசுரரும்
அதிசயத்தைப் பார்ப்போமென்று அவரேகும் வேளையிலே
எதிராக நின்றுநந்தி ஏதுரைப்பா ரம்மானை
மூவர்களுந் தேவர்களும் மூர்த்திகளுங் காணாத
தேவரீ ரெழுந்தருளி திசைநோக்கி வந்ததென்ன
அப்போது நந்தியுடன் ஆதி மிகவுரைப்பார்
இப்போ தோரற்புதமாய் இருக்குதென்றா ரெல்லோரும்
வானோக்கிக் காலும் மலர்நோக்கிச் சிரசும்
தானமது மாறி தலைகீழாய் நிற்பதுவும்
பார்த்துவர லாமெனவே பையநடை கொண்டேனென்றார்
சாற்றுமொழி கேட்டுநந்தி தானுரைப்பா ரம்மானை
அங்கல்லத் தானம் அழிந்ததுகா ணீசுரரே
இங்கு நான்கண்டேன் எழுந்தருளி வந்ததினால்
தலந்தா னிளகி தான்வந்த தாலேதான் 140

குலந்தா னழியும் குசல்பிறக்கும் ராச்சியத்தில்
வரம்பழியு மாரி மனுநீதங் குன்றுமையா
பரம்பெரிய வேதம் பழுதுவருங் கண்டீரே
என்றந்த மாமுனியும் ஈசுரரை யுங்கூட்டி
குன்றுபொன் னான கிரிமேவித் தானிருந்தார்
நடந்த புதுமையென்ன நாம்வருத்திப் பார்க்கவென்று
திடந்தெளிந்த மாமுனிவன் செப்பவே ஈசுரரும்
சாத்திர வேதச் சதுர்மறையைத் தான்வருத்தி
சித்திர புத்திரரைச் சீக்கிரத்தி லேயழைத்து
வந்த புதுமை வகையென்ன நம்கணக்கா
இந்தக் கணக்கை எடுத்துரைநீ யென்றனராம்
அப்போது ஈசுரரை அன்போ டுறவணங்கி
செப்போடு வொத்த சித்திரருஞ் செப்பலுற்றார்
சாத்திரத்தி லுற்ற தன்மை மிகக்கேளும்
சீத்துவ மாகச் சித்திரரும் செப்பலுற்றார்
முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே
தன்பிறவி யோடாறு தான்பிறந்தான் சூத்திரமாய்
மண்தா னுடம்பு வந்துதித் தோன்றனக்கு
விண்தா னுடம்பு விலாசக் குருவோடு
சலந்தா னுடம்புக்(கு) உறுதி தைரியங்கள் 160

வலந்தா னிளகி வன்னியோ டுங்கூடி
கலந்து திரண்ட கட்டைமுண்ட மானதுக்குப்
பிலந்தூக்கும் வாயு பிராணன்கா ணீசுரரே
முப்பழியோ டாறு உயிரழித்த மாயனுக்கு
இப்போது வந்த இவன்தான் கொடிதுவையா
மாயனாலு முழமாய் மனுச்சிங் கமுகமாய்
வாயமாய் நம்மை வதைத்தானே யென்றுசொல்லி
அன்றா யனெடுத்த அளவா யுருவெடுத்துச்
சென்றா லவனுடைய திறத்தைநாம் பார்ப்போமென்று
வேகத்தால் துண்டம் வெடித்ததுகா ணிப்புதுமை
ஏகந்தா னாளும் ஈசனே யென்றுசொல்லி
இப்படியே சித்திரரும் எடுத்துரைக்கவே ஈசர்
அப்படியே வந்தவனுக்(கு) ஆயுசு மவன்பலமும்
கரணமுதல் நடப்பும் கட்டாக நீதேர்ந்து
மரணமுதல் நடப்பும் வகுத்துரைநீ நம்கணக்கா
அப்போது சித்திரரும் ஆதியருள் நெஞ்சில்வைத்துப்
பொற்பாத முண்டெனவே புகல்வா ரியல்கணக்கர்
அப்பனு மம்மை அடங்கிமிகப் பெறாமல்
கொப்பளித்துத் தானாய்க் குறுத்துவந்த நீசனுக்குத்
தத்துவந் தொண்ணூற்(று) ஆறுந் தடிக்குணந்தான் 180

புத்தி புலனைந்தும் பொய்ப்பூண்ட பூதமுமாய்
சத்துருக்கன் கண்கால் தலையும் வெறும்நீசம்
உற்றுணர்ந்து பாராத உடலு மவன்காலும்
மாயக் காயமதுக்கு வருசமொரு நூறிருப்பு
தோயநாதத் துளிர் தொகைபத்துநூ றாயிரந்தான்
வாழ்வுவந்து சேர்க்கை வருசம் பதினாலு
தாழ்வு தசைநரம்பு சனித்தமுப்பத் தோராண்டில்
ஆர்க்கை எலும்பு அடைக்கும் நரம்புடனே
மூர்க்கத் தசையும் உதிரப் புனலுடம்பும்
மண்தண்ணீ ரோடே வகைக்காகாப் பாண்டமிது
விண்பரந்த வீடு வெளிவாயில் ஓட்டலுமாய்
ஓட்டை மடத்துக்கு ஒன்பது கொந்துடனே
வீட்டைப் பிரித்தால் விறகுக்கு மாகாது
விசையிட்டு ஆட்டும் வித்தாரப் பாவையிலும்
பசையில்லாப் பாவையிது பட்சியொன் றாடிவரும்
பட்சிக்குக் காயம் பகைத்துக்கிட்ட முட்டுகையில்
குச்சியைக் கீழ்ப்போட்டு குதித்தோடு மக்குருவி
இக்குருவிக் கூடு இவன்மணிய மீசுரரே
அக்குருவி யேகும் அவ்வளவு மிந்நீசன்
பண்ணுகிற நீசம் பரமனுக்கு மேராது 200

கண்ணிமைக்கு முன்னே கனவுருட்டுச் செய்திடுவான்
இப்படியே வுள்ள இயல்பு மிவன்நினைவும்
அப்படியே நீசம் அடைந்த மனவீடும்
உள்ளவனாய் வந்து உருவெடுத்தா னாகையினால்
எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே
என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும்
அன்று அவன்தனக்கு ஆளனுப்பித் தான்வருத்தி
ஆரைவிடு வோமென்று ஆராய்ந்து ஈசுரரும்
சூரமுள்ள காலன் தூத னெமன்தனையும்
துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும்
மொட்டைக்குற ளிகளையும் முக்கோடிக் கூளியையும்
விட்டழைத்து வாருமென்று விடைகொடுத்தா ரீசுரரும்
துட்டக் குணத்தோர் துடியாய் மிகநடந்து
கொட்டங் கீழாகக் குருத்துநின்ற பாதகனை
தட்டு மிகமாறி தலைகீழாய் நின்றவனை
ஈச ரழைத்தார் எழுந்திருந்து வாவெனவே
நீசன் தனையழைக்க நெளிந்தே வுருண்டவனும்
பிரண்டுருளப் பிண்டம் பிசைபிசைந்து தான்மலங்க
மருண்ட விழியால் மாகம துகலங்கி
மண்ணை விட்டுயர மண்டைவர மாட்டாமல் 220

விண்ணெல்லா மெத்த வெம்மருண்ட தம்மானை
கயிலைக் கிடுகிடெங்கும் கண்டபேர் தாம்பதற
அகிலங் கிடுகிடெங்கும் அழைக்கவந்தோர் தாம்பதற
அரனா ரிடத்தில் அவர்கள்சில ரோடி
சிரமா னதுவெளியில் செல்லவர மாட்டாமல்
பூமி கலங்கிப் பொறுக்கமிகக் கூடாமல்
சாமியந்த நீசன் தான்வரவே மாச்சலுண்டு
என்றந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே
அன்று சிவனார் அதற்கென்ன செய்வோமென்று
தம்மாலே யாகும் தந்து தெளிந்தெடுத்துக்
கம்மாளன் வேலையினால் கவ்வையொன் றுண்டாக்கி
குத்திப் புறத்தே கோதிவையு மென்றுசொல்லி
எத்திசையும் நந்தி ஈசுவரனார் கைக்கொடுத்து
வேண்டியந்த நந்தி விரைவா யவர்நடந்து
ஊண்டிநின்ற நீசனையும் ஒருகவ்வை யால்கோதி
வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம்
பளிரெனவே வந்து பொருந்தியதே யம்மானை
பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும்
சுவாமிமுன் பானதிலே சுரண்டியத னாலிழுத்து
கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே 240

கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று
உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லா மிப்போது
என்றனிடங் கேளென்று ஈசுரனார் தானுரைக்க
உடனே யவனும் உள்ள மிகக்களித்து
விடமேதான் பூண்டு விரிகந்தைத் தானுடுத்து
மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுடத்
தோலி லிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான்
என்று களிப்பாய் ஈசுரரை யந்நீசன்
அன்று மொழிய அமர ரதையறிந்து
பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல்
எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை
லோகம் படைத்தவர்காண் உறுபொருளாய் நிற்பவர்காண்
ஏகம் நிறைந்தவர்காண் இறவா திருப்பவர்காண்
பட்சிப் பறவை பலசீவ செந்துகட்கும்
நிச்சயமாய்ப் பொசிப்பு நிதமு மளிப்பவர்காண்
மாயவனும் நான்முகனும் மறையு மிகக்காணாமல்
தேயவா றுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண்
இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும்
புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான்

கலிச்சி தோற்றம்

ஆனால்தான் தேவர்களே அப்படிநீ ரொப்பினீரே 260
தானா யிருந்து சர்வமதுமுண் டாக்கிவைத்த
ஆனா லெனதுடைய அளவி லளவாக
மானா ரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போங்காண்
என்றந்த நீசன் இழிவாகச் சொல்லிடவே
அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார்
நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று
வல்லபர மேசுரனார் வகையே தெனப்பார்த்து
உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே
அந்தமுடன் பிறந்தால் ஆகுமோ வென்றுரைத்தார்
அப்போது நீசன் அரனார் தனைநோக்கி
ஒப்பமாகா தென்பலத்தில் ஒன்றி லரைப்பலமாய்
அழகி லதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய்
குழகிய வாயழகாய்க் குரும்பத் தனத்தழகாய்
மேனி யழகாய் விழியழகாய் வீச்சழகாய்
யோனி யழகாய் ஒடுங்கு மிடையழகாய்
கரமழகாய்க் காலழகாய்க் கண்ணழகாய்ப் பல்லழகாய்
சரக்கூடு முன்னழகாய்த் தலைகண்டம் பின்னழகாய்
தொடையழகாய் விரலழகாய்ச் சொல்லழகாய்ப் பல்லழகாய்
நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய்
இடையழகாய் மேனி இறுக்கத் துடனழகாய் 280

உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய்
அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு
கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல்
மூவர்தே வர்களையும் மோக மாய்மயக்கச்
சீவ னதுகொடுத்துத் திட்டித்துத் தாருமென்றான்
அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது கேட்டதற்கு என்செய்வோ மென்றுசொல்லி
அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும்
திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தா ரம்மானை
கேட்டமா நீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே
தேட்டமுட னிப்போ செப்பென் றெனவுரைத்தார்
அப்போது சத்தி ஆதி யடிவணங்கி
ஒப்பொன் றில்லாத உடைய பெருமானே
பாதியாய் நீசனையும் பகுந்தே யவனுடம்பில்
விதியாயிடது விலாவி லொருயெலும்பைத்
தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி
திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
அன்றுஅந்த நீசனுட அரையிலோ ராக்கையிட்டு
இருக்கக் கீழ்கட்டி எழுந்திருநீ யென்றவுடன் 300

பொருக்கென வேயிடது புறத்தி லொருயெலும்பைத்
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து
வெறிகொண்ட நீசன் விலாவி லொடித்ததினால்
நீசன் பலத்தில் நேர்பாதி யாகுமென்று
வாசமட வாய்வரவே மதனன் தனைநினைத்தார்
மதனை யரன்நினைக்க மாநீசன் தன்னெலும்பு
வதன மடமாதாய் வந்ததுவே யம்மானை
நீசன் நினைத்த நினவுபோ லம்மடவை
பாசக்கலை தூவி பகட்டிவிழித் தாள்மருட்டி
மும்மடங்காய் மோகம் முருகுக் குழல்சரிய
கம்மடங்காத் தோசம் கரைபுரளத் தான்பிறந்தாள்
கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியுடன்
அண்டாளைச் சென்று ஆவிமுகத் தோடணைத்து
நன்றாகத் தர்மம் நாள்தோறுஞ் செய்துகுண்டம்
கண்டாரைப் போலே கட்டினான் மங்கையரை
மங்கையரை நீசன் வாயாரா முத்தமிட்டுக்
கொங்கைதனைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று
எடுப்பா னவளை இடுப்பிலே வைத்திடுவான்
படுப்பமோ வென்று பாய்விரிக்க நின்றிடுவான்
பெண்ணோ டுறவாடிப் பேதலித்து அந்நீசன் 320

மண்ணோடு மண்ணும் மருவுவது போல்மருவி
ஆசை யவள்பேரில் அங்கமெல்லாந் தானுருகி
நீச னவள்பேரில் நினைவாக நின்றதல்லால்
படைத்தருளி வைத்த பரமனையு மெண்ணாமல்
தடதடெனப் பெண்ணைத் தானெடுத்து முத்திடுவான்
அப்போது தேவர் அமரர்களும் பார்த்தவனை
இப்போது உன்விழிக்கு ஏற்கும் படியாகப்
பெண்படைத்துத் தந்த பெரியோனைத் தான்வணங்கி
மண்பரந்த மன்னா வரங்கேளு என்றனராம்
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
அன்றந்த ஈசர் அடிவணங்கி யேதுசொல்வான்
என்றனக்கு ஏற்ற இளமயிலை யுண்டாக்கித்
தந்தருளுங் கோவே சர்வ தயாபரனே
இனியெனக்கு ஏற்ற இயல்வரங்க ளானதெல்லாம்
கனியிதழும் வாயானே கையில்தர வேணுமென்றான்

கலியன் கேட்ட வரங்கள்

அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி
இப்படியே உன்றனக்கு ஏதுவரம் வேணுமென்றார்
என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன்
தெண்டனிட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு
கேட்பான் வரங்கள் கீழுமேலும் நடுங்க 340

வீழ்ப்பாரங் கெட்ட விசைகெட்ட மாநீசன்
மாயவனார் தன்னுடைய வாய்த்த முடிதனையும்
தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாருமென்றான்
அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தன்பிறப்பும்
வரமுடைய சத்தி வலக்கூறுந் தாருமென்றான்
சிவமூலஞ் சத்தித் திருமூல மானதுவும்
தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும்
மாலுடைய மூலம் வாய்த்தலட்ச மிமூலம்
மேலுடைய தெய்வ விதமூலமுந் தாரும்
காலனின் மூலம் காமாட்சி தன்மூலம்
வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம்
கணபதி யின்மூலம் கிங்கிலியர் மூலம்
துணையதிப னான சுப்பிரமணியர் மூலமதும்
ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மூலமெல்லாம்
வாயிதக் கண்ணே வரமாகத் தாருமென்றான்
அல்லாமற் பின்னும் அந்நீசன் கேட்டவரம்
பொல்லாத வித்தை புகலக்கே ளொண்ணுதலே
கூடுவிட்டுக் கூடு குதிக்கக் கருவதுவும்
நாடு பாழாக்கி நகரிகொள்ளை யாக்கிடவும்
துயில்வோர் போலுலகம் துஞ்சவைத்துக் கொள்ளைகொண்டு  360

அயதிமோ கினிக்கருவும் அரனேநீர் தாருமென்றான்
ஆவடக்கு மோகினியும் அழைக்கவெகு மோகினியும்
நாவடக்கு மோகினியும் நருளழைக்கும் மோகினியும்
ஆண்பெண் பிரிக்க அதிகவெகு மாரணமும்
கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுக்கும் மாரணமும்
கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும்
தொல்லை வருத்தி சோலிசெய் யுச்சாடனமும்
லோகமது வாழாமல் உள்ளமுங்கித் தாழ்ந்திடவும்
ஏகமாய்த் தம்பனமும் இதின்கரு வுந்தாரும்
கொட்டிக் கலைக்க கூறுகெட்டச் சல்லியமும்
ஒட்டியமுந் தாரும் உள்ளகரு வுந்தாரும்
பூசை முறையும் புவனச்சக்க ரமுடனே
தீட்சை விதிமுறையும் சிவவிதியுந் தாருமையா
சலமேல் கனல்மேல் தானிருக்கு மோடிகளும்
கலைமேல் குடைபிடிக்கக் கருவது வுந்தாரும்
மிருக மதைவருத்தி வேலையது கொண்டிடவும்
இறுக்கமுள்ள வாதை எனக்குவிட்டுத் தாருமையா
அட்டகர்ம மெட்டும் அடக்கிவரந் தாருமையா
மொட்டக் குறள்களையும் முன்னேவலாய்த் தாரும்
மந்திர சாலம் மாய்மாலத் தந்திரமும் 380

இந்திர சாலம் எனக்கருளு மென்றுரைத்தான்
நோவுக் கிரகம் நுழையாம லென்றனக்குத்
தாவுகெவுனக் குளிகை தாருமென்றான் மாநீசன்
வந்த பிணிதீர்க்க வைத்திய வாகடமும்
தந்துதந் தாகப்பல சாஸ்திர முந்தாரும்
மூவருட வடிவும் உதித்துவந்த முற்பிறப்பும்
தேவருட பிறப்பும் தெளிந்தெழுதித் தாருமென்றான்
பறக்குங் குளிகை பரனையழைக் குங்குளிகை
மறைக்குங் குளிகை மாலைவருத் துங்குளிகை
சாலக் குளிகை சத்திவருத் துங்குளிகை
வாலைக் குளிகை மறையைவருத் துங்குளிகை
காளிதனை வருத்திக் கைக்குள் விடுங்குளிகை
கூளிகணத் தைவருத்திக் கொண்டுவரும் நற்குளிகை
தேவரையும் வானவரைச் சென்றழைக் குங்குளிகை
மூவரை யுமழைத்து மோடிசெய்யுங் நற்குளிகை
பழிசெய்தால் வெல்லப் பாரத் தொழில்கள்முதல்
சுழிவரைகள் தானறிய சூதானமாய்த் தாரும்
மருட்டு விதமும் மாஞாலக் குண்டணியும்
உருட்டுங் கொடிய உரம்பேசிய மதமும்
வாள்வெடிக ளாயுதங்கள் வாய்தடுக்கத் தந்திரமும்
வேழ்வருத்தி வேலைகொள்ள விசையடக்குந் தந்திரமும்    400

துட்ட மிருகம் தூறுவிசங் கொண்டதெல்லாம்
கட்டுக்குள் கட்டிக் கீழ்ப்படியத் தந்திரமும்
கட்டுச் சுருக்கும் கடியபல வித்தைகளும்
நட்டு முட்டுள்ள நவநிதிய வஸ்துக்களும்
தந்திந்தப் பெண்ணுடனே சார்ந்துவிளை யாடிருந்து
விந்து சனங்கள் மிகுவாகத் தானுதித்துக்
கிளையோடே வாழ்வு கெறுவித மாயாண்டு
வளையான மாதை மறவாம லெப்போதும்
புத்திக் கருத்தும் பெண்பேரி லென்றனக்குச்
சற்றும் நெகிழாமல் தாரும்வர மென்றுரைத்தான்
அப்படியே வுள்ளவரம் அந்நீச னுக்கருள
எப்படித்தா னென்று எண்ணினா ரீசுரரும்
எண்ணியே ஈசர் ஏந்திழையாள் சத்தியுடன்
புண்ணிய நாதன் புகலலுற்றா ரம்மானை
முப்பத்தி ரண்டறமும் முகித்திருந்த வொண்ணுதலே
செப்புத் தனத்தழகு செவ்வே கருங்குயிலே
வின்னோத நீசன் விபரீதமாய்க் கேட்டதற்கு
இன்ன விதமென்று இயம்புநீ பெண்மயிலே
அப்போது சத்தி ஆதி யடிவணங்கி          420

நற்போது மறவா நல்லகன்னி யேதுரைப்பாள்
சாத்திரமும் வித்தைகளும் தந்திரமுங் கேட்டதினால்
சூத்திரச் சித்தனொன்று சுறுக்காயுண் டாக்குமென்றாள்

அகத்தீசர் பிறப்பு

உடனேதான் ஈசர் உள்ளங்களி கூர்ந்து
திடமாய்த்தான் ஈசர் சிந்தைதனி லுத்தரித்து
அகத்தீச னென்று ஆதிமன துள்ளிருந்து
செகத்தோர்கள் காண சித்தாதி தானாகி
சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே
சூத்திரச் சித்தாதி தோன்றினன்கா ணம்மானை
எல்லோருங் கண்டு இவராகு மென்றுசொல்லி
அல்லோரு மெச்சி அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதென்று ஈசர் நன்முனியைத் தானோக்கி
வல்ல கவியோடு வந்துதித்த சாஸ்திரியே
என்னென்ன சாஸ்திரங்கள் ஏதேதுக் கானாலும்
இன்னாநிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவுமென்றார்
அப்போ தகத்தீசர் ஆதிமறை முதலாய்
மைப்போடும் வித்தை மாஞால அச்சரமும்
கொடுத்தோ மெனவே கூறினார் மாமுனியும்
கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி
நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும் 440

அக்கறுகு சூடும் ஆதிமுத லந்தம்வரை
வசமாகும் வித்தை மரணம்வரா வித்தைகளும்
நிசமாகும் வித்தையெல்லாம் நீசனுக் கேகொடுத்தோம்
கொல்லவே மெத்தக் கோபத்தால் நீசனையும்
வெல்லவகை யில்லையல்லோ விடையேறு மீசுரரே
இந்நீசன் லோகமதில் இருந்தாளும் நாளையிலே
அன்னீத மல்லால் அறமறிய மாட்டானே
அல்லாமற் பின்னும் அச்சுதனார் சக்கரமும்
பொல்லாதான் கொண்டு போறான்மால் கிரீடமும்
இவ்வரிசை ரண்டும் இவனிடத்தி லேயிருந்தால்
எவ்வொருவ ரால்வதைக்க ஏலாது நீசனையும்

கலியரசன் சத்தியம்

என்று அகத்தீசர் இப்படியே தான்கூற
அன்றுஸ்ரீ ரங்கர் ஆண்டியுரு தானாகித்
தலைவிரித்துக் கந்தை சற்றே கலைபூண்டு
சிலையில்லா வெங்கையால் சென்றாரே நீசனிடம்
நீச னிடத்தில் நெடுமால்தான் முன்னேகி
வாசமுடன் வார்த்தை வழுத்தினா ரம்மானை
ஈச னிடத்தில் இறைஞ்சிவரம் பெற்றதிலே
தேச இரப்பனுக்குச் சிறுகா யென்றுரைத்தார்
தாரா தேபோனால் சாபமிடு வேனுனக்குப் 460

பாராய்நீ யென்று பகட்டினா ரெம்பெருமாள்
அப்போது நீசன் ஆண்டி தனைப்பார்த்து
இப்போது போடா இரப்பனோ டேதுசண்டை
மாயன் வரவேணும் வலுப்பார்த்து விட்டிடுவேன்
பேய னுடனெனக்குப் பேச்சென்ன நீபோடா
என்று அந்தநீசன் இவ்வளமை கூறிடவே
அன்று பரதேசி அவனோடங் கேதுரைப்பார்
பிச்சைக் காரன்தனக்குப் பெலமில்லை யென்றோநீ
அச்சம தில்லாமல் அடமா யிதுவுரைத்தாய்
பண்டாரந் தன்பலமும் பழிநீசா வுன்பலமும்
சண்டையிட்டுப் பார்த்தால் தான்தெரியும் மாநீசா
என்று பண்டாரம் இதுவுரைக்க அந்நீசன்
குன்று கரத்தெடுத்த கோபால ரோடுரைப்பான்
ஆள்படை களில்லாமல் ஆயுதங்க ளில்லாமல்
வேழ்படை களில்லை வெட்டவா ளிங்குமில்லை
தடியில்லை சக்கரமும் தானில்லை உன்கையிலே
முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோ டுயுத்தமிட்டால்
ஆண்மையில்லை யென்றனக்கு ஆயிழைமா ரேசுவரே
தாண்மைமொழி பேசாதே தலைவிரித்துப் பேயாநீ
மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் 480

தேவரையும் வேலைகொள்ள சிவமூலம் பெற்றிருக்க
ஒன்றில்லாப் பேயனோடு யுத்தமிட்டா லென்றனையும்
நன்றினியப் பெண்கள் நகைப்பார்நீ யப்புறம்போ
என்று அந்தநீசன் இயம்பத் திருமாலும்
நன்றுநன்று நீசா நானுரைக்க நீகேளு
பண்டாரத் தோடே படையெடுத்தா லாண்மையில்லை
என்றேதா னிப்போ(து) இயம்பினையே மாநீசா
பண்டார மென்றும் பயித்தியக் காரனென்றும்
ஒண்டியாய் வந்தவனொ(டு) யுத்தமிட மாட்டேனென்றும்
பிச்சைக் காரனெனவும் பெரிய இரப்பனென்றும்
கச்சையில்லா னென்றும் கணைகம்பில் லாதானென்றும்
இப்படியே பண்டாரம் என்றிருக்கும் பேர்களுக்கு
எப்படியும் வம்புசெய்வ(து) இல்லையென் றுண்மையுடன்
சத்திய மாகத் தானுரைநீ பார்ப்போமென்றார்
புத்தியில்லா நீசன் புகலுவான் பின்னாலே
பண்டார மென்றும் பரதேசி யானவரைத்
தண்டரளக் கந்தைத் தலைவிரித்த ஆண்டிகளை
அட்டியது செய்யேன் அவரோடு சண்டையிடேன்
ஒட்டியே வம்பு ஒருநாளுஞ் செய்வதில்லை
என்றான்காண் நீசன் எம்பெருமாள் தானுரைப்பார் 500

நன்றாக இப்படியே நட்டிசெய்ய மாட்டேனென்று
ஆணையிட்டுத் தாவென்று அருளினா ரெம்பெருமாள்
வீணமட நீசன் விளம்புவா னப்போது
ஆரார்கள் பேரில் ஆணையிட வேணுமென்று
பேராகச் சொல்லு பிச்சையெடுப் போனேயென்றான்
அப்போது பண்டாரம் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்போது நீதான் ஈசன்தனை வணங்கி
வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும்
பெண்டிவள் பேரதிலும் பெலமாக இப்போது
ஆண்டி பரதேசி ஆகிவந்த பேர்களையும்
வீண்டிடறு செய்யேன் எனவேநீ யாணையிட்டால்
ஆணைக் கிடறுசெய்து ஆண்டிகளைச் சில்லமிட்டால்
வீணேபோ மென்வரங்கள் வீட்டுப்பெண் ணார்கள்முதல்
பெண்தோற்று நானும் பெற்றவர முந்தோற்று
மண்தோற்று வாழ்வும் மக்கள்கிளை தோற்றுச்
சேனைத் தளந்தோற்று சீமையரசுந் தோற்று
ஆனைப் படைதோற்று அரசுமே டைதோற்று
என்னுயிருந் தோற்று என்கிளையோ டேநானும்
வன்னரகில் போவேன் என்றேவாக் குரைத்திடுநீ
அப்போது நீசன் ஆண்டி யுரைத்தபடி 520
எப்போதும் மறவேன் இதைமறந்து வம்புசெய்தால்
சொன்னபடி யெல்லாம் தோற்றிறந் தென்னுயிரும்
வன்னரகில் போவேனென்று ஆணையிட்டான் மாநீசன்